தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 6500 கலந்து கொண்டனர். இதில், 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
கருணை அறக்கட்டளை சார்பில் தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமை கனிமொழி தொடங்கி வைத்து பேசுகையில், ஊராட்சி சபைக் கூட்டங்களில் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட முகாமில், 6 ஆயிரம் பணியிடங்களுக்கு 100 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.
இளைஞர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என 4 ஆயிரம் பெண்கள் உள்பட மொத்தம் 6500 பேர் கலந்துகொண்டனர்.
இதில், தேர்வு செய்யப்பட்ட 1300 பெண்கள், 700 ஆண்களுக்கு பணி நியமன ஆணையை கனிமொழி வழங்கினார்.
இதில்,கீதாஜீவன் எம்.எல்.ஏ., கருணை அறக்கட்டளை நிறுவனர் இளமகிழன், தூய மரியன்னை கல்லூரி செயலர் புளோரா மேரி, முதல்வர் லூசியா ரோஸ், துணை முதல்வர் ஜெனோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.