தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகள் குறைதீர் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், வருவாய்த் துறை மூலமாக 58 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 வீதம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை அவர் வழங்கினார்.
தொடர்ந்து, அவர் பேசியது: குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், தகுதி வாய்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, வட்டாட்சியர்கள் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) முத்துராமலிங்கம், செல்வபிரசாத், ராஜீவ்குமார் தனசீலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.