கோவில்பட்டியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய இரு இளைஞர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் உலகு என்ற உலகுராஜ்(20). இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கடந்த டிச. 21ஆம் தேதி வள்ளுவர் நகரைச் சேர்ந்த காந்தாரி மனைவி வெயிலாச்சியை கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டார். அதுபோல, சன்னதுபுதுக்குடியைச் சேர்ந்த பால்தங்கச்சாமி மகன் ராஜா(32) என்பவர் சொத்துப் பிரச்னையில் உறவினர் ராஜன்கோயில் பிள்ளை என்பவரை கடந்த டிச.21இல் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
இவ்விருவரும் பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. மற்றும் கோவில்பட்டி டி.எஸ்.பி. யின் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவுப்படி, உலகு என்ற உலகுராஜும், ராஜாவும் சிறையில் குண்டர் தடுப்புக் காவல் பிரிவுக்கு வியாழக்கிழமை மாற்றப்பட்டனர்.