கோவில்பட்டியில் அரசுப் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த போது தவறி விழுந்த பயணி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
எட்டயபுரத்தைச் சேர்ந்த சேதுராமன் மகன் சங்கரநாராயணன் (55). கோவில்பட்டியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்த இவர், கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன. 8) எட்டயபுரத்திலிருந்து, கோவில்பட்டி நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினாராம்.
பேருந்து, கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் தலைமை அஞ்சலகம் அருகே சென்று கொண்டிருந்த போது, படிக்கட்டில் பயணம் செய்த அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவர், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.