போகி பண்டிகையை தூத்துக்குடி மாவட்டத்தில் மாசு இல்லாமல் கொண்டாட வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் திருநாளுக்கு முன்தினம் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருள்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை முன்னோர் கொண்டாடி வந்துள்ளனர்.
ஆனால் தற்போது போகி பண்டிகையின் போது பழைய பொருள்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருள்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்கள் மற்றும் பிற கழிவு பொருள்களை எரிப்பதால், காற்று மாசு ஏற்படுவதோடு, அதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, பொதுமக்கள் போகிப்பண்டிகையின் போது பழைய பொருள்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாத்து காற்று மாசில்லாதவாறு பண்டிகையை கொண்டாடி மகிழ ஒத்துழைக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.