கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 5 கிராமப் பகுதிகளில் ரூ.1.51கோடி மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.
நெடுஞ்சாலைத் துறை ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்புத் திட்டம் 2018-19இன் கீழ் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆசூர் - காப்புலிங்கம்பட்டி சாலையை மேம்படுத்துதல், காப்புலிங்கம்பட்டி சாலையை நெகிழி பயன்படுத்தி உறுதிப்படுத்துதல், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வில்லிசேரி சாலையின் தரத்தை மேம்படுத்துதல் உள்பட 6.40 கி.மீ. தொலைவுக்கு ரூ.124.10 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் மந்தித்தோப்பு - கிருஷ்ணா நகர் சாலையை ரூ.27.34 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில், அமைச்சர் கடம்பூர் செ.ராஜு வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவிக் கோட்டப் பொறியாளர் ராஜு, உதவிப் பொறியாளர் சின்னச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், முத்துகுமார், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் கிரி, கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் பரமசிவன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்கள் மகேஷ்குமார் (இனாம்மணியாச்சி), கணேஷ்பாண்டியன் (துறையூர்), நிலவள வங்கித் தலைவர் ரமேஷ், அதிமுக நகரச் செயலர்கள் விஜயபாண்டியன் (கோவில்பட்டி), வினோபாஜி (கயத்தாறு), அதிமுக மாவட்ட விவசாய அணி துணைச் செயலர் ராமசந்திரன், முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.