சாத்தான்குளம் அருகே ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
சாத்தான்குளம் இடக்குடி தெருவைச் சேர்ந்த மூக்காண்டி மகன் மணிகண்டன் (40). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநரான மந்திரம் மகன் மணிகண்டனுக்கும் (27) இடையே முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம், சாத்தான்குளத்தில் மூ. மணிகண்டனை 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து 3 பேரை கைது செய்தனர். ம.மணிகண்டன்(27) தலைமறைவானார். இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அவர் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ராஜாசுந்தர் தலைமையிலான தனிப்படை போலீஸார், அங்கு சென்று மணிகண்டனை வெள்ளிக்கிழமை கைது செய்து சாத்தான்குளம் அழைத்து வந்தனர். சனிக்கிழமை அவரை சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.