கடம்பூர் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.
வானரமுட்டி ஆர்.வி.ராமன் நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன் கார்த்திக் (29). இவரும், இவரது தாய் இந்திராவும் கடம்பூரிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு திங்கள்கிழமை பைக்கில் ஊருக்கு வந்துகொண்டிருந்தனர். அயிரவன்பட்டி பேருந்து நிறுத்தத்தை அடுத்த கோழிப்பண்ணை அருகே கார்த்திக் பைக்கை ஓட்டிவந்தபோது, பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த இந்திரா தவறி கீழே விழுந்தாராம். இதில், காயமடைந்த அவரை கயத்தாறு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினார். இதையடுத்து, இந்திராவின் சடலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து கடம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.