பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஜூலை 24 ஆம் தேதி வரை ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளிகல்வித்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் ( www.tnvelaivaaippu.gov.in ) பதிவு செய்யலாம். அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகியும் பதிவு செய்யலாம். ஆதார் அட்டை, குடும்ப அட்டை,சாதிச் சான்றிதழ் மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி மாணவர்,மாணவிகள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.