பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கான மருத்துவப் படியை மாதந்தோறும் ரூ.2 ஆயிரமாக வழங்க வேண்டும்; பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு ஜனவரி 2017 முதல் வழங்க வேண்டிய 15 சதவீத உயர்வுடன் கூடிய ஊதிய மாற்றத்தை உடனே வழங்க வேண்டும்; ஒப்பந்தத்
தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 6 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்; பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கான 4ஜி அலைக்கற்றையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத் தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். உதவித் தலைவர் கந்தசாமி, உதவிச் செயலர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓய்வூதியர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் மோகன்தாஸ், ஓய்வூதியர் சங்கச் செயலர் முத்துராமலிங்கம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கச் செயலர் பாலசுப்பிரமணியன், தலைவர் மகேந்திரமணி, ஒப்பந்த ஊழியர் சங்கத் தலைவர் ஆறுமுகம், செயலர் பாலசிங், ஓய்வூதியர் சங்கப் பொருளாளர் திருவட்டப்போத்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.