விளாத்திகுளம் அருகே பூசனூரில் ஸ்ரீமகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி மாட்டுவண்டி எல்கை பந்தயம் பூசனூர்-விளாத்திகுளம் நெடுஞ்சாலையில் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட காளை மாடுகள் போட்டியில் கலந்து கொண்டன.
பெரிய மாடு, சிறிய மாடு, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.
முதலாவதாக நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் 16 ஜோடி காளை மாடுகள் பங்கேற்றன. 10 கி.மீ. தொலைவுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதில், பூசனூரை சேர்ந்த பிரித்திவி ஷா மாட்டுவண்டி முதலிடமும், வெள்ளாளங்குளத்தைச் சேர்ந்த கண்ணன் மாட்டுவண்டி இரண்டாமிடத்திலும், சங்கரப்பேரியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மாட்டுவண்டி மூன்றாமிடத்திலும் வெற்றிபெற்றது.
சிறிய மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் 20 ஜோடி காளை மாடுகள் பங்கேற்றன. 8 கி.மீ. தொலைவு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில், கம்பத்துபட்டியைச் சேர்ந்த வீர சின்னராஜு மாட்டுவண்டி முதலிடமும், அலமேலுமங்கைபுரத்தைச் சேர்ந்த ராஜம்மாள் மாட்டுவண்டி 2ஆவது இடத்திலும், சக்கம்மாள்புரத்தைச் சேர்ந்த பரணி மாட்டுவண்டி 3ஆவது இடத்திலும் வெற்றி பெற்றது.
பூஞ்சிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் 27 ஜோடி காளை மாடுகள் பங்கேற்றன. 7 கி.மீ. தொலைவு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதில், பூசனூரை சேர்ந்த பிரித்திவிஷா மாட்டுவண்டி முதலிடமும், சிங்கிலிபட்டியைச் சேர்ந்த முருகபாண்டியன் மாட்டுவண்டி 2ஆவது இடத்திலும், வேப்பங்குளத்தைச் சேர்ந்த செந்தூர்பாண்டியன் மாட்டுவண்டி 3ஆவது இடத்திலும் வெற்றி பெற்றது.
தொடர்ந்து கோயில் திடலில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தய வீரர்கள், சாரதிகள், மாட்டுவண்டி உரிமையாளர்கள் ஆகியோருக்கு மொத்தம் ரூ. 1 லட்சமும், பரிசு பொருள்களும், கைத்தறி ஆடைகளும் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.