இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிக ஒளி வீசக்கூடிய எல்இடி பல்புகள் பயன்படுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலர் ம.ராமச்சந்திரன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முகப்பு விளக்குகளை பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை மீறி அதிக ஒளியை வெளியிடும் விளக்குகள் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
மேலும், நான்கு சக்கர வாகனங்களில் இரு முகப்பு விளக்குகளுக்குப் பதில் நான்கு அல்லது ஐந்து விளக்குகளைப் பொருத்தி அதிக ஒளியைத் தரும் வகையில் அமைக்கின்றனர். இரு சக்கர வாகனங்களில் ஒரு முகப்பு விளக்குடன் கூடுதலாக எல்இடி பல்பை பொருத்துகின்றனர். இதனால் எதிரில் வருபவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முகப்பு விளக்குகளில் அதிக ஒளி வீசக்கூடிய எல்இடி விளக்குகள் பொருத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.