தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் சென்ற லாரி ஓட்டுநர் தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சிவகளை பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா (31). இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த வேல் கண்ணன் (23). லாரி ஓட்டுநர்களான இவர்கள் இருவரும், கோவில்பட்டியில் உள்ள நிறுவனத்தில் லாரியை விட்டுவிட்டு வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனராம். வேல் கண்ணன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார்.
மதுரை-தூத்துக்குடி புறவழிச்சாலையில் மடத்தூர் விலக்கு அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதியது. இதில், கீழே விழுந்த இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பாரதிராஜா உயிரிழந்தார். வேல் கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்துகுறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.