வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி கோயிலில் இன்று தேரோட்டம்
வாசுதேவநல்லூர் அருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி(அர்த்தநாரீஸ்வரர்)கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 14) பிற்பகலில் நடைபெறுகிறது.
இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட இத்திருக்கோயிலில், ஆனிப் பெருந்திருவிழா ஆண்டுதோறும் 10 நாள்கள் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு, இத்திருவிழா ஜூலை 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8 ஆம் திருநாளான ஜூலை 13 ஆம் தேதி வரை தினமும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர் சார்பில் சுவாமி வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின், சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 9 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலையில் சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து, சுவாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு எழுந்தருளி தேரோட்டம் நடைபெறுகிறது.
பின்னர், தேர் நிலையம் வந்தவுடன், திருவாவடுதுறை ஆதினம் சார்பில் சிறப்புப் பூஜையும், இரவு 10 மணிக்கு தேர்த்தடம் பார்க்க வெட்டும் குதிரையில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும்.
10 ஆம் திருநாளான திங்கள்கிழமை(ஜூலை 15) காலை 10.30 மணிக்கு, தீர்த்தவாரி கனக பல்லக்கில் அம்மையப்பன் திருவீதி உலாவும், மாலை 6 மணிக்கு இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயம் சார்பில் சப்தாவரணம் மற்றும் ரிஷப வாகனத்தில் அம்மையப்பன் திருவீதி உலாவும், அதைத் தொடர்ந்து, இரவு 9 மணிக்கு நாடார் உறவின்முறை சார்பில் நடைபெறவுள்ள தெப்ப உற்சவத்துடன் ஆனிப் பெருந்திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, கோயில் தக்கார் ந. யக்ஞநாராயணன், ஆய்வாளர் ந. கண்ணன், செயல் அலுவலர் சு. சதீஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.