எட்டயபுரம் அருகே சாலையோரம் தண்ணீர் பருகி சென்ற மயில் ஒன்று லாரியில் அடிபட்டு உயிரிழந்தது.
தூத்துக்குடி - மதுரை நான்கு வழிச்சாலையின் இரு புறமும் வல்லநாடு கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டு விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இக்குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறது. அவ்வாறு எட்டயபுரம் அடுத்துள்ள மேலக்கரந்தை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குடிநீர் குழாயிலிருந்து வழிந்தோடும் நீரை பருகிய ஏராளமான மயில்கள் நான்கு வழிச் சாலையோரம் தாழ்வாக பறந்து சென்றன. அப்போது அவ்வழியாக வந்த லாரியின் பக்கவாட்டில் மயில்கள் அடிபட்டு காயங்களுடன் பறந்தன. இதில், ஒரு மயில் இறந்தது.
வனத்துறையினர் மயிலை கைப்பற்றி பரிசோதனைக்கு விளாத்திகுளம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 100 க்கும் மேற்பட்ட மான்கள், ஆயிரக்கணக்கான மயில்கள், முயல்கள், பறவைகள் வசிக்கும் எட்டயபுரம், சிந்தலக்கரை, மேலக்கரந்தை, புதூர் விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப்பகுதிகளில் வனத்துறை சார்பில் குடிநீர்த் தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பி வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.