புறையூர் புனித இஞ்ஞாசியார் ஆலய திருவிழாவையொட்டி சப்பர பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆலயத் திருவிழா இம்மாதம் 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற நற்செய்தி பெருவிழாவில் ஆரோக்கியராஜ் மறையுரை ஆற்றினார். அருட்தந்தை ஸ்டார்வின் அடிகளார் தலைமையில் ஆராதனை, அருட்தந்தை அலாய்சியுஸ் தலைமையில் நற்கருணைப் பவனி, அருட்தந்தை வினிஸ்டன் தலைமையில் புனிதரின் சப்பர பவனி ஆகியவை நடைபெற்றது.
திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அருட்தந்தை ராயப்பன் தலைமையில் காலையில் புனிதரின் பெருவிழா, அருட்தந்தை ஸ்டேன்லி தலைமையில் புனிதரின் சப்பர பவனி, மாலையில் அருட்தந்தை சகேஷ் தலைமையில் கொடியிறக்கம், ஆசீர்வாதம் ஆகியவை நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர். திங்கள்கிழமை காலை 11 மணிக்கு பங்குத்தந்தை அமல்ராஜ் தலைமையில் நன்றி திருப்பலி, தொடர்ந்து அசன விருந்து ஆகியவை நடைபெறும். ஏற்பாடுகளை புறையூர் ஊர் நலக் கமிட்டியினர், இறைமக்கள் செய்திருந்தனர்.