ஓட்டப்பிடாரம் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ள முப்புலிவெட்டியைச் சேர்ந்தவர் சு. ராஜாமணி(45). இவர் புதியம்புத்தூர் பகுதி தனியார் ஆலையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அமுதா(41). இவரும் பாஞ்சாலங்குறிச்சியில் தனியார் நிறுவனத்தில் கூலித் தொளிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தம்பதிக்குள் ஏற்பட்ட தருத்து வேறுபாடு காரணமாக திங்கள்கிழமை காலையில் அவர்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டதாம். அப்போது வீட்டில் இருந்த அரிவாளால் அமுதாவை, ராஜாமணி வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டாராம். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடிக்கு அரசு மருத்துவமனையில் அமுதா அனுமதிக்கப்பட்டார். இது குறித்து, ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வார் சிவலிங்க சேகர், வழக்குப் பதிந்து, ராஜாமணியை கைது செய்தார்.