திருச்செந்தூர் நகரப் பேருந்துகளில் கூட்ட நெரிசல் காரணமாக பள்ளி மாணவிகள் படிக்கட்டில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் அவல நிலை உள்ளது.
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வசதியாக, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பள்ளி வந்து செல்ல நகரப் பேருந்துகளில் இலவச பேருந்து பயண அட்டையை அரசு வழங்கி வருகிறது. இருப்பினும் குறிப்பிட்ட வழித்தடத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நகரப் பேருந்துகள் இல்லாததால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
திருச்செந்தூரில் அருள்மிகு செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் இயங்கி வருகின்றன. இப்பள்ளி மாணவர், மாணவிகள் பெரும்பாலானோர் அரசுப் பேருந்துகளில் இலவச பயண அட்டையை பயன்படுத்தியே சென்று வருகின்றனர்.
குறிப்பாக திருச்செந்தூரில் இருந்து உடன்குடி மார்க்கமாக செல்லும் பேருந்துகளில் அதிகளவில் மாணவர், மாணவிகள் பயணம் செய்கின்றனர். இவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் நேரங்களில் ஒன்றிரண்டு அரசு நகரப் பேருந்துகளே உள்ளன. இதனால் அந்த பேருந்துகள் எப்போதும் கூட்ட மிகுதியாகவே உள்ளது. வேறு வழியின்றி இப்பேருந்துகளில் பயணிக்கும் மாணவர், மாணவிகள் படிக்கட்டில் நின்றபடியே ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே, மாணவர், மாணவிகளின் நலன் கருதி கூடுதல் நகரப் பேருந்துகள் அல்லது பள்ளி மாணவர், மாணவிகளுக்கென தனியாக அரசுப் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.