திருச்செந்தூர் ஆலந்தலை புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
ஆலந்தலை புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு இத் திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் காலை 6.15 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, பிரார்த்தனை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது. புதன்கிழமை மாலை 6 மணிக்கு அந்தோணியாரின் தேர் பவனி நடைபெற்றது. மாலை ஆராதனையில் பங்குத் தந்தை ஜெய்கர் மறையுரையாற்றினார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவிழா திருப்பலி வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெற்றது.
சிவகங்கை ரோச் நகர் பங்குத்தந்தை அமல்ராஜ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில், பங்குத்தந்தை ஜெயக்குமார், இணை பங்குத்தந்தைகள் ஜாண்சன், பிரான்சிஸ் மற்றும் பக்த சபையினர், ஊர்நலக்கமிட்டியினர் மற்றும் பங்கு மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
திருப்பலியின் போது கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தவர்களுக்கும், திருப்பாடல் மற்றும் பாடப்போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் பரிசுகள் வழங்கப் பட்டன. விழாவில் சிவகங்கை ரோச் நகரத்தில் ஆலயம் கட்டுவதற்கு ஆலந்தலை மக்கள் சார்பில் ரூ . 50 ஆயிரம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஆலந்தலை பங்குத்தந்தைகள் மற்றும் சபையினர் ஊர் நலக்கமிட்டியினர் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.