எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2. 64 கோடியில் கட்டப்பட்டுள்ள 19 கூடுதல் வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் மு.வீரப்பன், விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்களைப் பார்வையிட்டு குத்துவிளக்கு ஏற்றி இனிப்புகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, எட்டயபுரம் வட்டாட்சியர் வதனாள், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சுகுமார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஆழ்வார் உதயகுமார், எழுத்தாளர் இளசை மணியன், தலைமை ஆசிரியர் அனிதா மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், அறிவியல் ஆய்வக கட்டடம் மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை சார்பில், விளாத்திகுளம் தொகுதிக்கு உள்பட்ட பெரியசாமிபுரத்தில் ரூ.1.11 கோடியில் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதியையும் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்துவைத்தார்.