தூத்துக்குடி அருகே குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
மாவட்ட சைல்டுலைன் அமைப்பு சார்பில், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளியில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.
சைல்டுலைன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் தலைமை வகித்தார். தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் (பொறுப்பு) முகமது அப்துல் காதர் சுபையர் பேசினார். தொடர்ந்து, பள்ளியில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வுப் பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.
இதில், தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் முத்து, உதவி ஆய்வாளர் ஹேமா, குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் ஆதிநாராயணன், முத்திரை ஆய்வாளர் விஸ்வநாதன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஜோதிக்குமார் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சைல்டுலைன் பணியாளர்கள், மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளத்தில்...
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சைல்டு லைன் சார்பில் விளாத்திகுளத்தில் நடைபெற்ற குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ரோஸ்லின் சாந்தி தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் பத்மநாபபிள்ளை முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமானது விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி எட்டயபுரம் நெடுஞ்சாலை, பேருந்து நிலையம், மதுரை நெடுஞ்சாலை, தினசரி சந்தை, மீனாட்சி அம்மன் கோயில் உள்பட நகரின் முக்கிய விதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.
இதில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஊர்வலத்தில் மாவட்ட சைல்டு லைன் ஊழியர்கள் வாணி, சரவணன், சோணமுத்து, காசிராஜன், தன்னார்வலர்கள் முத்துமாரி, தேவ்ஆனந்த் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.