கோவில்பட்டி லக்குமி ஆலையில் பணியின்போது இறந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியத் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
கோவில்பட்டி லக்குமி ஆலை தொழிலாளி பாலகிருஷ்ணன் 2018 பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி பணியின்போது உயிரிழந்தார். அவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இறந்த பாலகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி நிறுவனத் திட்டத்தின்கீழ் சார்ந்தோருக்கான ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சி லக்குமி ஆலையில் நடைபெற்றது. தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழக இணை இயக்குநர் (பொ) அருள்ராஜ் தலைமை வகித்தார். ஆலையின் முதுநிலை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் ஓய்வூதியத் தொகை ரூ. 2 லட்சத்து 80 ஆயிரத்து 588-க்கான காசோலையை பாலகிருஷ்ணனின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
பாலகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.18ஆயிரத்து197 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் மூலம் வழங்கப்படும். நிகழ்ச்சியில், தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக கிளை மேலாளர் ரியாஸ்தீன் மற்றும் ஆலை தொழிலாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.