நாசரேத் பேரூராட்சிப் பகுதியில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்; மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றார் செயல்அலுவலர் ம. ரெங்கசாமி.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
நாசரேத் பேரூராட்சிக்குத் தேவையான குடிநீர் ஆழ்வார்திருநகரியிலுள்ள உறைகிணற்றில் இருந்து வீடுகளுக்கும், தெரு குழாய்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, கோடை என்பதால் ஆற்றில் நீர்வரத்தின்றி உறைகிணறுகளில் ஊற்றுநீர் குறைந்து விட்டது. எனவே, நாசரேத் பேரூராட்சிப் பகுதியிலுள்ள மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும், வீட்டிலுள்ள குடிநீர்க் குழாய்களில் மின் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சினால் மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, கூடுதலாக அபராதமும் விதிக்கப்படும். எனவே, மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.