பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அஞ்சல் ஊழியர்களின் மாதச் சம்பளம், ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் அனைத்தையும் ஒவ்வொரு மாதமும் இறுதிநாள் வேலை நாளில் வழங்க வேண்டும்; ஓய்வூதியம் மற்றும் மாதச் சம்பளத்தை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 3ஆம் பிரிவு, தபால்காரர், 4ஆம் பிரிவு, கிராமிய அஞ்சல் ஊழியர்கள், அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஓய்வூதியர் சங்கத் தலைவர் சுப்புராஜ், கோட்டத் தலைவர்கள் ரெங்கசாமி (3 ஆம் பிரிவு), முருகன்(4ஆம் பிரிவு), கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்டத் தலைவர் மணி ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாநிலச் செயலர் (4ஆம் பிரிவு) கண்ணன், ஓய்வூதியர் சங்க கோட்டச் செயலர் சுப்பையா, கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்டச் செயலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், கோட்டச் செயலர்கள் அருள்ராஜன்(3ஆம் பிரிவு), பெரியசாமி(4ஆம் பிரிவு) உள்பட அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர்.