தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி பெல் ஹோட்டல் முன்பிருந்து தொடங்கிய பேரணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணியில், தூத்துக்குடி புனித லசால் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். பல்வேறு வீதிகள் வழியாக சென்ற பேரணி லசால் பள்ளி முன்பு நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் வேதரத்தினம், லசால் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் கென்னடி, உடற்கல்வி ஆசிரியர் ஜெயக்குமார், மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளர் சிவசங்கரன், உதவி ஆய்வாளர் மீஹா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.