விளாத்திகுளம் அருகேயுள்ள பூசனூர் கிராமத்தில் வேளாண்மை துறையின் மானாவாரி வேளாண்மை இயக்க திட்டத்தின்கீழ், கோடை உழவுப்பணிகள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, விளாத்திகுளம் எம்எல்ஏ பி. சின்னப்பன் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் மகாதேவன், வேளாண்மை துணை இயக்குநர் தமிழ்மலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோடை உழவுப்பணிகளை தொடங்கிவைத்து விவசாயிகளுக்கு மண்வள அட்டை மற்றும் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்க திட்ட கையேட்டை வழங்கிப் பேசியதா வது: தூத்துக்குடி மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் 32ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்க திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கோடை உழவுப்பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் தேவையான விதைகள், உரம், மருந்து உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
மேலும், விவசாயிகளுக்கு விவசாய பொருள்களின் மதிப்பு கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியும் வழங்கப்படுகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ஜாகீர்உசேன், விளாத்திகுளம் வேளாண்மை உதவி இயக்குநர் பூவண்ணன் மற்றும் விவசாயிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.