கயத்தாறு ஒன்றிய அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றும் அனைவருக்கும் தடையின்றி வேலை வழங்க வேண்டும், நிலுவையிலுள்ள ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளான ஏப்.18 ஆம் தேதிக்கான ஊதியத்தை வேலை விடுப்பு ஊதியமாக வழங்க வேண்டும், வேலை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் வேலை அட்டை வழங்க வேண்டும், உசிலங்குளம், கரடிகுளம் கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கயத்தாறு ஒன்றிய, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திரண்டனர்.
பிறகு அவர்கள், கோரிக்கையை வலியுறுத்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சீனிவாசனிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கு. ரவீந்திரன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் சுந்தரி முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கயத்தாறு ஒன்றியச் செயலர் சாலமன்ராஜ் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
இதில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த அய்யாத்துரை (உசிலங்குளம்), தங்கம் என்ற பாப்பா (சி.ஆர்.காலனி), சாராள் (கரடிகுளம்), ராமலட்சுமி (கயத்தாறு), ராசையா (ராஜாபுதுக்குடி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.