சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
மாவட்ட காவல்துறை போதைப்பொருள் நுண்ணறிவுபிரிவு, வ.உ.சி. கல்லூரி மற்றும் மாவட்ட செஞ்சிலுவை சங்கம் ஆகியன சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியது: போதைப்பொருள் குறித்து ஏதேனும் தகவல்கள் இருக்கும் பட்சத்தில், ஹலோ போலீஸ் செல்லிடப்பேசி எண் 95141 44100 மற்றும் 100 ஆகியவற்றுக்கு தகவல் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
தொடர்ந்து விழிப்புணர்வுப் பேரணியை அவர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகளுக்கிடையே கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், பேராசிரியர் நாகராஜன், மருத்துவர் செவ்வேல் முருகன், தூத்துக்குடி போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு துணை கண்காணிப்பாளர் முரளீதரன், காவல்துறை செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் சத்திய நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விளாத்திகுளம்: புதூரில் காவல்நிலையம் சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர், மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
காவல் ஆய்வாளர் நாகலட்சுமி பேரணியை தொடங்கிவைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.அப்போது, தலைமையாசிரியர் முத்துராஜ் தலைமையில் மாணவர், மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.