கோவில்பட்டி மாதாங்கோவில் தெருவில் உள்ள இந்து இசை வேளாளர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ குருநாதர் சமேத ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர், சுவாமி- அம்பாளுக்கு அபிஷேக, சிறப்பு தீபாராதனையும், மாலை 4 மணியளவில் பூரண கும்ப ஜெபமும் நடைபெற்றன.
தொடர்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னதியிலும் காப்பு கட்டப்பட்டு, இரவு 7.15 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து, நந்தி, பலிபீடம், கொடி மரம் ஆகியவற்றிற்கு 18 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி- அம்பாள் திருவீதியுலா நடைபெற்றது. 2ஆம் நாளான சனிக்கிழமை (மார்ச் 2) காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு சுவாமி- அம்பாள் சிம்ம வாகனத்தில் திருவீதியுலாவும் நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு இருளப்பசுவாமி முக கப்பறை திருவீதியுலாவும், திங்கள்கிழமை காலை 7 மணிக்கு மஞ்சள் பால்குடம் ஊர்வலமும், காலை 10 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்கார தீபாராதனையும் நடைபெறுகின்றன.