பன்னாட்டு நிறுவனங்களுக்காகத்தான் பாஜக ஆட்சி: சஞ்சய் தத்
பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி பன்னாட்டு நிறுவன முதலாளிகளுக்காக மட்டுமே தவிர, ஏழை மக்களுக்காக அல்ல என்றார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலர் சஞ்சய் தத்.
தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தல் ஆயத்தக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
கடந்த மக்களவைத் தேர்தலின்போது பல்வேறு பொய்களை கூறி பாரதிய ஜனதா கட்சியினர் ஆட்சிக்கு வந்தனர். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி பன்னாட்டு நிறுவன முதலாளிகளுக்காக மட்டுமே தவிர, ஏழை மக்களுக்காக அல்ல. கடந்த 5 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசையும், தமிழக அதிமுக அரசையும் குற்றம் சாட்டி வந்த பாமக, தற்போது தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பது நியாயமல்ல.
தமிழகத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி அனைத்தையும் பிரதமர் மோடி குஜராத் மாநிலத்துக்கு கொண்டு சென்று விட்டார். கஜா புயல் பாதிப்பின் போது தமிழகம் வராத பிரதமர் மோடி தற்போது தேர்தல் நேரம் என்றவுடன் அடிக்கடி தமிழகத்துக்கு வந்து பாசாங்கு செய்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்க நாம் அனைவரும் வீதிவீதியாக சென்று களப்பணியாற்ற வேண்டும். ராகுல்காந்தி ஏழை எளிய மக்களுக்காக களப்பணியாற்றி வருகிறார் என்றார் அவர்.
கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர்கள் எச். வசந்தகுமார் எம்எல்ஏ, மயூரா ஜெயக்குமார், இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலர் அமிர்தராஜ், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் எஸ். டேனியல்ராஜ், ராணி வெங்கடேசன், தூத்துக்குடி மாநகர் மாவட்டத் தலைவர் சி.எஸ். முரளிதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.