பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் பகத்சிங் மன்றத்தினர் மற்றும் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு உழவர் உழைப்பாளர் விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பகத்சிங் மன்ற விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் சின்னச்சாமி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சீத்தாராமன், ஜெயகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், 2018-19ஆம் ஆண்டில் பயிரிடப்பட்டு படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும். விவசாய நிலத்தில் காற்றாலை அமைப்பதற்கு தடை செய்ய வேண்டும். விவசாய நிலத்தில் மின்கோபுர வழிப்பாதை அமைப்பதை தடை செய்ய வேண்டும்.
பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீர்வரத்து ஓடை, குளங்கள், ஊருணியைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். பகத்சிங் மன்ற மாவட்டத் தலைவர் உத்தண்டராமன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் இவ்விருப்பு அமைப்புகளைச் சேர்ந்தோர் திரளாக கலந்துகொண்டனர்.