அனுமதியின்றி விளம்பரம் அச்சிட்டால் 6 மாதங்கள் சிறை: அச்சகங்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

அனுமதியின்றி விளம்பரம் அச்சிட்டால், 6 மாதங்கள் வரை சிறைதண்டனை அனுபவிக்க நேரிடும் என

அனுமதியின்றி விளம்பரம் அச்சிட்டால், 6 மாதங்கள் வரை சிறைதண்டனை அனுபவிக்க நேரிடும் என அச்சக உரிமையாளர்களிடம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் ஏப்.18இல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக  மாவட்டத்தில் உள்ள திருமண மண்டப உரிமையாளர்கள், நகை அடகு பிடிப்போர், வட்டி தொழில் செய்வோர் மற்றும் அச்சக உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்தா ஆட்சியர் மேலும் பேசியது:  தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், திருமண மண்டபங்களில் அரசியல் கட்சியினரின் கூட்டம் நடைபெறும் பட்சத்தில் அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்ற பின்னரே திருமண மண்டப உரிமையாளர்கள் தங்களுடைய மண்டபத்தில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
திருமண மண்டப முன்பதிவு தொடர்பான பதிவேடுகளை முழுமையாக பராமரிக்க வேண்டும். திருமண மண்டப முன்பதிவுக்கு முன்னரே அரசியல் கட்சி நிகழ்ச்சி நடத்துபவர்கள் உரிய அனுமதியை பெற்று மண்டப உரிமையாளர்களிடம் வழங்கி முன்பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பான அனுமதி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் எந்தநேரமும் பதிவுசெய்யலாம். இணையதளம் மூலமாகவே உரிய அனுமதி வழங்கப்படும். 
ரூ.50,000-க்கு மேல் ரொக்கமாக கொண்டு செல்ல அனுமதி இல்லை. பணம் எடுத்து செல்பவர்கள் அதற்கான ஆவணங்களை உடன் கொண்டுச் செல்ல வேண்டும். ரூ.10,000-க்கு மேல் மதிப்புள்ள பரிசுப் பொருள்கள், மதுபானங்கள் வைத்திருப்போர் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.10 லட்சத்துக்கு மேல் எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் வருமானவரித் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும்.
 எனவே, நகை அடகுபிடிப்போர், வட்டித் தொழில் செய்வோர் தங்கள் கணக்குகளை முறையான ஆவணங்களுடன் பராமரிக்க வேண்டும். மேலும், ரூ.1 லட்சத்திற்கு மேல் பணம் பெறுபவர்கள் விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவிதேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.
அச்சக உரிமையாளர்கள் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை அச்சிடும் போது, யாரிடம் இருந்து அச்சிடும் பணி பெறப்பட்டதோ அவர்களின் விவரங்களை பெற்று முறையாக பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்.  மேலும், அச்சக உரிமையாளர்கள் விளம்பரங்கள் செய்யும் அரசியல் கட்சியினரிடம் இருந்து உரிய முறையில் எழுத்துப் பூர்வமாக உறுதிமொழியை பெற வேண்டும். அதற்கு 2 நபர்கள் சாட்சியம் பெற வேண்டும்.
உரிய அனுமதி பெறாமல் விளம்பரம் அச்சடிக்கும் அச்சக உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 6 மாதங்கள் வரை தண்டனை விதிக்க நேரிடும். தேர்தல் விதிமீறல்களை தடுக்கவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றார் அவர்.
 கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப. ஜெயசீலன்,  மாவட்ட வருவாய் அலுவலர் மு.வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com