கோவில்பட்டியில் மக்களவைத் தேர்தலையொட்டி பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான துணிகள் பறிமுதல் செய்யப்பட்டன .
தூத்துக்குடி மாவட்ட எல்கையான தோட்டிலோவன்பட்டி விலக்கில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர் தமிழ்செல்வன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் ரவிசந்திரன், போலீஸார் ஜான்கென்னடி, சுதன், விஜயராஜ் ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் வாகனச் சோதனை நடத்தினர்.
அப்போது, ஆவணங்களின்றி ஒரு காரில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரெடிமேட் துணிகள் கொண்டு செல்வது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து, கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
காரை ஓட்டி வந்தவர் மதுரை போகி தெருவைச் சேர்ந்த தா.சுரேஷ்படேல் என்பதும், மதுரையில் இருந்து கோவில்பட்டியில் உள்ள ஜவுளி கடைகளுக்கு ரெடிமேட் துணிகளை மாதிரிக்கு காண்பிப்பதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. ஆவணங்களை காண்பித்தபின் அவை ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.