சாத்தான்குளம் அருகே மொபெட் மீது பேருந்து மோதியதில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இட்டமொழி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் நா. தங்கராஜ் (52). சலவைத் தொழிலாளி. இவரது மனைவி ஜக்கம்மாள்தேவி (47). இவர்களுக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
சாத்தான்குளம் வாரச்சந்தையில் பொருள்கள் வாங்குவதற்காக மனைவியுடன் வியாழக்கிழமை மாலை புறப்பட்டார் தங்கராஜ். புதுக்குளம் விலக்கு இடையே வந்தபோது பின்னால் வந்த தனியார் கல்லூரிப் பேருந்து மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பலத்த காயமடைந்த ஜக்கம்மாள்தேவி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு இறந்தார்.
இதுகுறித்து தங்கராஜ் மகன் சுடலை (19), சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி வழக்குப் பதிந்தார். ஆய்வாளர் அந்தோணி, தலைமறைவான கல்லூரிப் பேருந்து ஓட்டுநரை தேடி வருகிறார்.