மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்க முகாம் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில்மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இம்முகாம் நடைபெற்றது. கோட்டாட்சியர் தி. தனப்ரியா தலைமை வகித்தார். வட்டாட்சியர் த.தில்லைபாண்டி, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் ப. மாரியம்மாள், வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல், அரசுப் போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் ரா.ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி (விவி-பேட்) பயன்பாடு குறித்து பயணிகள், மாணவர்களுக்கு கோட்டாட்சியர் செயல்விளக்கம் அளித்ததுடன், துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தார்.
இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் குறித்து, கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கோட்டாட்சியர் பேசியது: அச்சக உரிமையாளர்கள் தேர்தல் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் போன்றவற்றை அச்சிடுவதற்கு முன்பு தேர்தல் ஆணையத்தின் அனுமதி படிவத்தை பெற்றுக்கொள்தல் அவசியம். மேலும், அச்சகத்தின் பெயர், முகவரி, தொடர்பு எண், அச்சிடும் துண்டுப் பிரசுரங்களின் மொத்த எண்ணிக்கை போன்ற விவரங்கள் அவற்றில் இடம்பெற வேண்டும்.
பின்னர், அச்சிட்டதற்கான உறுதிமொழி படிவத்தை தேர்தல்அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார் அவர். கூட்டத்தில், திருச்செந்தூர் பகுதியிலுள்ள அச்சக உரிமையாளர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.