தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை 246 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22, 23 ஆம் தேதிகளில் நடைபெற்ற போராட்டத்தின்போது கலவரம் ஏற்பட்ட நிலையில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, தூத்துக்குடி மற்றும் சென்னையில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கினார். இந்த சம்பவம் தொடர்பாக 700 பேரிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவுசெய்தது. 9 ஆம் கட்ட விசாரணை கடந்த 12 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.
2 ஆம் நாள் போராட்டத்தின்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களில் 70 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில், ஆஜரான 53 பேரிடம் விசாரணை நடைபெற்றது.
9 ஆம் கட்ட விசாரணை முடிவுற்ற நிலையில், இதுவரை 246 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், 411 ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும், 10 ஆம் கட்ட விசாரணை ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கும் என்றும் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.