ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் பங்குனித் திருவிழா கருடசேவை சனிக்கிழமை நடைபெற்றது.
நவதிருப்பதி கோவில்களில் 9 ஆவது ஸ்தலமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்ககூடிய ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலின் பங்குனி உற்சவம் கடந்த மார்ச் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாள்களில் சுவாமி பொலிந்துநின்றபிரான் பரங்கி நாற்காலி, சிம்ம வாகனம், அனுமான் வாகனம், சேஷவாகனம், யானை வாகனம், இந்திர வாகனம், குதிரை வாகனம், புன்னைமர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா நடைபெறுகறது.
5 ஆம் திருநாளையொட்டி சனிக்கிழமை காலை 6 மணிக்கு விஸ்வரூபம், காலை 7.30 மணிக்கு திருமஞ்சணம், காலை 8 மணிக்கு நித்தியல் கோஷ்டி, காலை 8.30 மணிக்கு வீதிஉலா, காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், முற்பகல் 11 மணிக்கு நித்தியல் கோஷ்டியும் நடைபெற்றது. இரவில் சுவாமி பொலிந்துநின்றபிரான் கருடவாகனத்திலும் சுவாமி நம்மாழ்வார் ஹம்சவாகனத்திலும் எழுதுருளிய கருடசேவை நடைபெற்றது. மார்ச் 20 ஆம் தேதி தேரோட்டமும், மார்ச் 21 ஆம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
கருடசேவை நிகழ்வில் கோயில் நிர்வாக அதிகாரி விஸ்வநாத், ஆதிநாத ஆழ்வார் கைங்கர்யசபா தலைவர் வரதராஜன், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் காரிமாறன் கலைக்காப்பகத்தினர் உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.