கோவில்பட்டி அருகே சீராக தண்ணீர் வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், வரதம்பட்டி ஊராட்சியில் வரதம்பட்டி, வள்ளிநாயகிபுரம், காட்டுராமன்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில், வள்ளிநாயகிபுரம் கிராமத்தில் சுமார் 600 பேர் குடியிருந்து வருகிறார்களாம். இப்பகுதி மக்களுக்கு கிராம கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் கிடையாதாம். இந்நிலையில் அப்பகுதி பொதுமக்களுக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் குழாய் அமைக்கப்பட்டு ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் கட்டப்பட்ட 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்ததாம்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக சீரான தண்ணீர் விநியோகம் இல்லையாம். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி முன் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தங்கள் கோரிக்கை நிறைவேறாவிடில், ஏப்ரல் 18 இல் நடைபெறும் தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முருகானந்தத்திடம் கேட்ட போது, அப்பகுதியில் மேலும், ஆழ்குழாய் கிணறு அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.