தமிழகத்தில் இடைத் தேர்தல் முடிவு ஆட்சி மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என கனிமொழி எம்.பி. பேசினார்.
தூத்துக்குடி தெற்குமாவட்ட திமுக சார்பில் வல்லநாடு, ஆழ்வார்கற்குளம், ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி கிராமங்களில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். மாநில மகளிரணிச் செயலர் கனிமொழி எம்.பி., பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து அவர் பேசியது: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்திருந்தால் ஒவ்வொரு கிராமத்திலும் மக்களுக்கான அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்பட்டு இருக்கும் . மத்திய அரசு சொன்னபடி எதனையும் செய்யாமல் மக்களை வஞ்சித்து விட்டது. ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவோம் என்று உறுதிமொழி கொடுத்தார்களே தவிர, அதனை இதுவரை நிறைவேற்றவே இல்லை. இப்பகுதி கிராமங்கள் தாமிரவருணி ஆற்றின் கரையோரங்களில் இருந்தாலும்கூட மக்கள் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
கொங்கராயகுறிச்சி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருப்பது தாமிரவருணி ஆற்றில் எந்தக்காலத்திலும் மணல் அள்ளக்கூடாது என்பது தான். நடைபெறும் இடைத்தேர்தலில் ஆட்சி நிச்சயமாக மாறும், மணல்கொள்ளையும் நிச்சயமாக நிறுத்தப்படும் என்றார் அவர்.
இதில், மாநில மகளிரணி துணைஅமைப்பாளர் ஹெலன்டேவிட்சன், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட துணைச் செயலர் ஆறுமுகபெருமாள், ஸ்ரீவைகுண்டம் தொகுதி பொறுப்பாளர் காவல்காடு சொர்ணகுமார், ஒன்றியச் செயலர்கள் கருங்குளம் நல்லமுத்து, ஸ்ரீவைகுண்டம் கொம்பையாபாண்டியன், ஸ்ரீவைகுண்டம் நகரச் செயலர் பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.