தேர்தல் விதிமுறை அமல்: அச்சகம், திருமண மண்டப உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு

விளாத்திகுளத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள், நகை அடகு பிடிப்பேர், வட்டி தொழில் செய்வோர், அச்சக உரிமையாளர்கள் ஆகியோர்களுடன்


விளாத்திகுளத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள், நகை அடகு பிடிப்பேர், வட்டி தொழில் செய்வோர், அச்சக உரிமையாளர்கள் ஆகியோர்களுடன் தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
  மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். விளாத்திகுளம் வட்டாட்சியர் ராஜ்குமார், எட்டயபுரம் வட்டாட்சியர் வதனாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்,  தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவித் தேர்தல் நடத்தும்  அலுவலரிடம் அனுமதி பெற்ற பின்னரே திருமண மண்டப உரிமையாளர்கள் தங்களுடைய மண்டபத்தில் அரசியல் கட்சியினர் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.  அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினரின் அனுமதி மட்டும் பெற்று திருமண மண்டப உரிமையாளர்கள் அனுமதி அளிக்கக்கூடாது. இதுதொடர்பான அனுமதிகள் தேர்தல் ஆணையத்தின் சுவேதா ஆப் மூலம் இணையதளத்தில் எந்த நேரமும் பதிவு செய்யலாம். இணையதளம் மூலமாகவே உரிய அனுமதி வழங்கப்படும். கூட்டம் நடைபெறுவது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும்  அலுவலரிடம் மண்டப பொறுப்பாளர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
  தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக கொண்டு செல்ல அனுமதி இல்லை. பணம் எடுத்து செல்பவர்கள் அதற்கான ஆவணங்களை உடன் கொண்டு செல்ல வேண்டும். எனவே நகை அடகு பிடிப்போர்,  வட்டி தொழில் செய்வோர் ஆகியோர் தங்கள் கணக்குகளை முறையான ஆவணங்களுடன் பராமரிக்க வேண்டும். மேலும், ரூ.1 லட்சத்திற்கு மேல் பணம் பெறுபவர்கள் விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.  
 அச்சக உரிமையாளர்கள் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை அச்சிடும்போது, யாரிடமிருந்து அச்சிடும் பணி பெறப்பட்டதோ அவர்களின் விவரங்களை பெற்று முறையாக பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்.  விளம்பர பதாகைகளில் அச்சகம் பெயர் முகவரியுடன் குறிப்பிட்டிருக்க வேண்டும். போஸ்டர்கள் எண்ணிக்கை மற்றும் கட்டணம் மற்றும் உறுதிமொழி கடிதம் ஆகிய விவரங்களுடன் 4 தினங்களுக்குள் அனைத்து விவரங்களையும் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும்  அலுவலர் அனுப்பி வைக்க வேண்டும். உரிய அனுமதி பெறாமல் விளம்பரம் அச்சடிக்கும் அச்சக உரிமையாளர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
   எனவே தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு அனைவரும் செயல்பட வேண்டும் என தெரிவித்தனர். கூட்டத்தில் அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், நிர்வாகிகள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com