100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவில்பட்டியில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் சார்பில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 18 வயது நிரம்பிய ஒவ்வொருவரும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க வேண்டும். வாக்குரிமை நமது அடிப்படை உரிமை. வாக்களிப்பது ஜனநாயகக் கடமை. ஜனநாயகத்தை காத்திட வாக்களிப்பீர். 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்து, பேரணியை தொடங்கி வைத்தார். வட்டாட்சியர் அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணி, எட்டயபுரம் சாலை, கதிரேசன் கோயில் சாலை, பார்க் சாலை, பிரதான சாலை, புதுரோடு வழியாக வந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இதில், கோட்டாட்சியர் அமுதா, வட்டாட்சியர்கள் லிங்கராஜ் (கயத்தாறு), பரமசிவம் (கோவில்பட்டி), துணை வட்டாட்சியர் சரவணப்பெருமாள், ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர்கள் மோகன், தினகர், சுரேஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.