கயத்தாறையடுத்த வில்லிசேரி கீழக்காலனி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி அப்பகுதி பொதுமக்கள் கருப்புக் கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி வட்டத்திற்கு உள்பட்ட வில்லிசேரி கீழக்காலனி பகுதி பொதுமக்களுக்கு குடிநீர், வாருகால் வசதி, தெருவிளக்கு, சீரான சாலை அமைக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லையாம். மேலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு காட்சிப்பொருளாகவே இருந்து வருகிறதாம். மயான இடவசதி மற்றும் சாலை வசதியும் செய்துதரவில்லையாம். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் மனு அளித்தார்களாம். ஆனால் தற்போது வரை எவ்வித பலனும் கிடைக்கவில்லையாம்.
இதையடுத்து, அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி அப் பகுதி பொதுமக்கள் கருப்புக் கொடிகளை ஏந்தி வந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாகவும் தெரிவித்தனர். தகவல் அறிந்து , சம்பவ இடத்திற்கு சென்ற கயத்தாறு காவல் ஆய்வாளர் ஆவுடையப்பன் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில், தங்கள் கோரிக்கைகள் குறித்து வட்டாட்சியரிடம் கீழக்காலனியைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேரடியாக வந்து முறையிடுமாறும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடிந்த பின்பு தங்கள் கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.