மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்க முகாம் கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்; கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும்; 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர்களாக பெயரைப் பதிவு செய்ய வேண்டும்; வாக்குப்பதிவு ஜனநாயகத்தின் கடமை ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இலுப்பையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் பரமசிவன் தலைமை வகித்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது; யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிபடுத்தும் வாக்கு ஒப்புகைச் சீட்டை அதற்கான கருவியிலிருந்து எப்படி பெறுவது என்பன குறித்து செயல்விளக்கம் அளித்தார். இதில், வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.