தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக தலைமையிலான அரசை இத்தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளிக்கிழமை வைகோ தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். திறந்த வேனில் இருந்தவாறு அவர் பேசியது:
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழிக்கு வாக்கு சேகரிப்பது எனது வாழ்வில் மறக்க முடியாத தருணமாகும்.
கனிமொழி பெண் உரிமைக்காக, விவசாயிகளுக்காக, மீனவர்களுக்காக, ஒடுக்கப்பட்டவர்களுக்காக, சமூகத்தில் நலிந்தோருக்காக என ஒவ்வொருவரது உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பவர். அவரது குரல் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஒலிக்க வேண்டும்.
மோடி அரசானது தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் வஞ்சித்துவிட்டது. கஜா புயலால் மக்கள் உயிரிழந்தபோதும், ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லபட்டபோதும் மோடி ஆறுதல்கூடத் தெரிவிக்கவில்லை.
பாஜக அரசுக்கு முடிவுரை எழுதும் நேரம் வந்துவிட்டது. தமிழகம், புதுவையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். மத்தியில் பிரதமராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவார் என்றார்.
தொடர்ந்து, ஆழ்வார்திருநகரியிலும் வைகோ பிரசாரம் மேற்கொண்டார்.