திமுக ஆட்சியில் கோயில்கள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்பட்டு கும்பாபிஷகம் நடைபெற்றது என்றார் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி.
திருச்செந்தூர் தேரடித்திடலில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிய அவர், திருச்செந்தூர் வடக்குரதவீதி, இரும்புவளைவு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பிரசார வாகனத்தில் இருந்து வாக்குச் சேகரித்துப் பேசியது:
திமுக தலைவர் கருணாநிதி தமிழ் மக்களுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர். அவருடைய மகளாக கூட்டணியின் சார்பில் வேட்பாளராக உங்கள் முன் நின்றுகொண்டிருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக பாஜக ஆட்சியால் நாம் அடைந்த சிரமங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
மத்தியில் இருக்கும் ஆட்சியும், மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் மக்களின் பிரச்னைகள், விவசாயிகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பில் அக்கறை கொள்ளாத நிலை உள்ளது.
திருச்செந்தூர் கோயில் பிரகாரம் இடிந்துவிழுந்தும் அதை இன்னமும் சரிசெய்யவில்லை. ஆனால், திமுக ஆட்சியில் அனைத்து கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றதோடு, முறையாகவும் பராமரிக்கப்பட்டது. விரைவில் திமுக ஆட்சி வரும்.
தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலினும், மத்தியில் கூட்டணி ஆட்சியில் ராகுல் காந்தி பிரதமராகவும் வருவர். அப்போது, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார் அவர்.
பிரசாரத்தின்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மற்றும் திரளான கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.