திருச்செந்தூரில் திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 30th March 2019 11:50 PM | Last Updated : 30th March 2019 11:50 PM | அ+அ அ- |

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது.
மாவட்ட மகளிரணிச் செயலர் ஜெஸி பொன்ராணி தலைமை வகித்தார். மாநில துணைச் செயலர் குமாரி விஜயகுமார் வரவேற்றார். திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் நிர்வாகி சு.கு.சந்திரசேகரன், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், மாநில மருத்துவரணி துணை அமைப்பாளர் செ.வெற்றிவேல், ஒன்றியச் செயலர் செங்குழி ரமேஷ், நகரச் செயலர் வாள் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் கனிமொழி பேசியது: பெண்களுக்கு தேர்தலில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை கருணாநிதிதான் கொண்டு வந்தார். திமுக தலைமையிலான அரசு தான் பெண்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியது. தலைவர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு ரூ. 50 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்க உறுதி அளித்துள்ளார். மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கி அதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கவுள்ளார். திமுக தலைமையிலான கூட்டணிக்கு அனைவரும் ஆதரவு தந்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், ஒன்றியச் செயலர்கள் பாலசிங், நவீன்குமார், காயல்பட்டினம் நகரச் செயலர் முத்துமுகம்மது, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுதாகர், மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர்கள் ராஜமோகன், பொன்முருகேசன், முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மா.சுரேஷ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் வேலம்மாள் நன்றி கூறினார்.