கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அரசுப் பொருள்காட்சியில், போக்குவரத்து காவல் துறையினர் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து துண்டுப் பிரசுரங்களை புதன்கிழமை விநியோகித்தனர்.
கோவில்பட்டி இ.எஸ்.ஐ.மருந்தகம் வளாகத்தில் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அரசுப் பொருள்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், அரசு துறைகளின் பல்வேறு திட்டங்கள் குறித்த 27 அரங்குகள் உள்பட ஏராளமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
இருச்சக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும், செல்லிடப்பேசியை பயன்படுத்திக்கொண்டோ, மது அருந்திய நிலையிலோ வாகனங்களை ஓட்டக் கூடாது என்பன உள்ளிட்ட வாசகங்களுடன் டிஜிட்டல் விளம்பரப்பலகை, புகைப்படம் போன்றவை மக்களின் பார்வைக்கு வைத்துள்ளனர்.
இந்நிலையில், சாலைப் பாதுகாப்பு விதிகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை பொருள்காட்சிக்கு வரும் பொதுமக்களுக்கு போக்குவரத்து காவல் துறையினர் புதன்கிழமை விநியோகித்தனர். அதன் காவல் உதவி ஆய்வாளர் நாராயணன் தலைமையில் போக்குவரத்து போலீஸார் சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து மக்களிடம் அறிவுறுத்தினர்.