தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்ப்புக்கான முன்னேற்பாடு குறித்து அதிகாரிகளுடன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொறியியல் கல்லூரி மாணவர் சேர்ப்பு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:
தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்ப்பு மொத்தம் 42 மையங்களில் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மட்டுமே மாணவர் சேர்ப்பு மையமாக செயல்பட உள்ளது. இந்த மையத்தில் மாணவ, மாணவிகள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால் அவர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருவதுடன், வளாகத்தை தூய்மையாக பராமரிக்க மாநகராட்சி மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சக்கர நாற்காலி வைக்கப்பட வேண்டும். மேலும், தடையில்லா மின்சாரம், தேவைப்படும்பட்சத்தில் மாணவ, மாணவிகளுக்கு பந்தல் அமைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் விக்னேஸ்வரி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.