காமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கடைகளில் கயத்தாறு ஒன்றிய உணவுப் பொருள் பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
காமநாயக்கன்பட்டியில் உள்ள பால் உற்பத்தி நிலையத்தில் நடத்திய ஆய்வில் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தரமற்ற தயிர், பாலாடைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
அதுபோல, அப்பகுதியில் உள்ள கடைகளில் நடத்திய ஆய்வில் காலாவதியான உணவுப் பொருள் பாக்கெட்டுகள், தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் ஆகியவற்றை உணவுப் பொருள் அதிகாரி பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், உரிமம் பெறாமல் கடைகள் நடத்தி வரும் உரிமையாளர்களிடம் உரிமம் பெற வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை, பாலிதீன் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது. காலாவதியான பொருள்களை விற்பனை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.