கோடை விடுமுறை காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வரும் நிலையில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு, குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் நடைபாதை பகுதிகளில் கடைகள் ஆக்கிரமிப்பால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளுக்கும், வணிகர்களுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதமும் ஏற்படுகிறது. மேலும், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட சம்பவங்களும் நிகழ வாய்ப்புள்ளது. இதேபோன்று வாகனங்களை நிறுத்துவதற்கும் போதுமான இடமில்லை.
இதனிடையே, திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையம் பூட்டியே கிடக்கிறது. இதனால் அருவியில் அத்துமீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் உடமைகளும் பல நேரங்களில் திருட்டுப் போகின்றன.
எனவே, சுற்றுலாப் பயணிகள் இடையூறின்றி அருவிப்பகுதிக்குச் செல்லவும், வாகனங்களை நிறுத்துவதற்கு கூடுதல் வசதி செய்யவும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.